வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 25, 2013

பத்ரின் அரசியல்

நாற்காலிக்காக இருகாலிகள் நாற்காலி ஆகிறார்கள் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வார். பதவிக்காக் மனிதர்கள் மிருகங்களாக மாறிவிடுகிற இன்றைய அரசியல் அவலத்தை அந்த வரிகள் படம்பிடிக்கின்றன.

பத்ரு யுத்தம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசியல் நடவ்டிக்கைகளில் காணப்பட்ட பிரமிப்பூட்டும் நுட்பத்தையும் நாகரீகத்தையும் அடையாளப் படுத்துகிறது. பத்ரு யுத்ததின் அரசிய்ல் கூறுகளில் உலக அரசியலுக்கு எழுதப்படாத பாடங்கள் ஏராளமாக இன்றளவும் கிடைக்கின்றன.

ஹிஜ்ரீ 2 ம் ஆண்டு (கி.பி. 624 மார்ச் 14 ம் தேதி) ரம்லான் மாதத்தின் 17 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் தொடங்கி சூரியன் சுடத் தொடங்குவதற்கு முன்னதாகவே முடிந்து போன அந்த யுத்தத்த்தின் நிகழ்வுகளையும் அதன் நாயகர்களையும் அதில் களப்பலியானவர்களயும் ஒவ்வொரு ஆண்டும் உலக முஸ்லிம்கள் ரமலான் 17 ம் நாள் அன்று நினைவு கூறுகிறார்கள். இன்றும் கூட அந்தப் பொட்டல் வெளியில் அதே தினத்தன்று திரளாக கூடுகிற முஸ்லிம்கள் 1432 வருடங்களுக்கு முந்தைய அந்த நிகழ்வை உணர்வுப் பூர்வ்மாக நினைவு கூர்ந்து பத்ரு யுத்தத்தில் நபிகள் நாயகத்தோடு கலந்து கொண்ட நபிதோழர்களுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள். மலேஷியாவில் தேசிய விடுமுறை விடப்படுகிறது.

ஒரு பாலை வனப் பிரதேசத்தில் இரண்டு பழங்குடி இனத்தவரின் மோதல் அல்லது ஒரு சகோதர யுத்தம் என்பதை தாண்டி வரலாற்றை கவர்ந்திழுக்கிற சிறப்பம்சங்கள் எதுவுற்ற அந்த சண்டை, வரலாற்றை தலை கீழாகப் புரட்டிப் போட்டது. மத்தியக் கிழக்குப் பகுதியின் அரசியலை மட்டுமல்ல உலக அரசியலின் போக்கிலும் அது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அத்ற்குப் பின்னால் ஏற்பட்ட எழ்ச்சியில் அன்றை இரு பெரும் வல்லரசுகளான பாரசீகத்தின் சாசானியப் பேரர்சும் ரோமின் பைஜாந்தியப் பேரரசும் சபதமில்லாமல் சாய்ந்தன.

அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கண்டுபிடிக்கப் ப்டுவதற்கு முன்னாள் அன்றை உலகம் என்பது ஆசியா ஆப்ரிக்கா ஐரோப்பா என்ற மூன்று கண்டங்களை மட்டுமே கொண்டிருந்தது. அன்றைய அந்தபூமியின் நிலப்பரப்பில் சுமார் 70 சதவீத பரப்பிற்கு இஸ்லாம் பரவியது என்றால் அதற்கு மூல வித்தாக அமைந்தது பத்ரு யுத்தம்

அதனால் தான் ஆசியக் கண்டத்தின் வரலாற்றை திசை திருப்பிய இருபது யுத்தங்களை வரிசைப் படுத்துகிற வர்லாற்றாய்வாளர்கள் பத்ரு யுத்ததிற்கு இரண்டாவது இடத்தை தருகிறார்கள். .

இந்த வரிசையில் முதல் யுத்தமாக ம்கா அலக்ஸாண்டர் பாரசீகத்தின் மீது நடத்திய யுத்தம் குறிப்பிடுகிற்து. அதற்கு காரணம் அது காலத்தால முந்தியது என்பது மாத்திரமே! அதிக தாக்கத்தை ஏற்படுத்திய யுத்தம் என்று எடுத்துக் கொண்டால் பத்ரு யுத்தம் தான் ஆசிய வரலாற்றின் பெரும் திருப்பு முனையான யுத்தமாகும்.

ஒரு உள்ளூர் சண்டயாக நடைபெற்ற அந்த யுத்தம் உலக யுத்தங்களை விட வரலாற்றின் போக்கை மாற்றுவதில் அதிக தாக்கத்தை செலுத்தியது.

பானிபட் யுத்தம் இந்தியாவில் முகலாயர் ஆட்சிக்கு வழி கோலியது. பிளாசிப் போர் கிழக்கிந்தியக் கம்பனி இந்தியாவை கைகொள்ள காரணமாகியது முத்துது துறை முகத்தின் மீது ஜப்பான் தொடுத்த தாக்குக்தல் ஜப்பானின் சித்தைவுக்கு வழிவகுத்தது. இந்த யுத்தங்களும் இது போன்ற இன்னும் சில யுத்தங்கள் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்றாலும் அவற்றின் தாக்கம் அதிகபட்சமாக இருநூறு வருடங்களை தாண்டவில்லை. ஜப்பான் 50 ஆண்டுகளில் மீண்டெழுந்தது விட்டதை இன்றைய தலை முறை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பத்ரு யுத்தத்தின் புறத் தாக்கம் 15 ஆண்டுகள் தங்களிடையே இருந்தது என்று நபிதோழர்கள் கூறுகிறார்கள். அதன் அகத்தாக்கமோ கால வரையறைக்கு அப்பாற்பட்டு விசுவரூபம் எடுத்து நிற்கிறது.

யுத்தம் தொடங்குவத்ற்கு சற்று முன்னதாக யுத்தத்திற்கான தயாரிப்புகளை செய்து விட்டு தனது கூடாரத்திற்கு திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனிடம் செய்த பிரார்த்தனையின் வாசகத்தை கவனித்துப் பார்த்தால் .அன்றைய சூழ்நிலையின் கையறு நிலையையும் அந்த யுத்தத்தில் கிடைத்த வெற்றிய்ன் தாக்கத்தையும் அறிந்து கொள்ளலாம்.
“இறைவா! இந்தச் சிறு கூட்டத்தை இப்போது நீ அழித்து விட்டால இனி இந்த பூமியில் உன்னை வணங்க யாரும் மிஞசமாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்த்னை செய்தார்கள்.

தனது வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்திருக்கிற மூன்னூறு நண்பர்களை பாதுகாக்கிற ஒரு தலைவரின் பொறுப்புணர்வும் கவலையும் அக்கறையும் அந்த இறைஞ்சுதலில் வெளிப்படுகிறது. அது மட்டுமல்ல அந்த யுத்தத்தில் கிடைக்கிற வெற்றி இந்தப் பூமியில் ஏற்படுத்தப் போகும் மாற்றத்தையும் அது பிரதிபலித்தது.

இப்போது மெல்போர்ன் நக்ரத்தின் தெருக்கலில், சிகாகோவின் வீதிகளில் மாஸ்கோவின் மைதானங்களில் அல்லாஹு அக்பர் என்ற சப்தம் ஒலிக்கிறது என்றால் அதற்கு பத்ரின் வெற்றி தான் காரணம். இந்த வெற்றியில் நபிகள் நாயகத்தின் அரசியல் முதிர்ச்சியும் நேர்மையும் மறைந்திருக்கிறது.

ஒரு மாபெரும் தலைவரின் அரசியல் வாழ்வில் போராட்டங்களும் யுத்தங்களும் சகஜம். அவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதிலும் அவற்றுக்கு பின் கிடைத்த வெற்றி தோல்விகளை அவர் எப்படி பயன்படுத்திக் கொண்டார் என்பதும் அவரை வரலாற்றின் சிறபான உய்ரங்களுக்கு எடுத்துச் செல்கிறது.

பத்ரு யுத்தத்திற்கான ஆயத்தங்களின் போதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கையாண்ட நெறி முறைகளில் நாகரீகம் மிளிர்ந்தது.

பின்னாட்களில் நபிகள் நாயகத்தின் உளவாளி என்று பெயர் பெற்ர ஹுதைபா பின் யமான் (ரலி) கூறுகிறார் :

நானும் அபூ ஹுசைலும் நபிகள் நாயகத்துடன் சேர்ந்து பத்ரில் பங்கேற்ப்பதற்காக ரக்சியமாக மதீனாவுக்குப் புறப்பட்டோம். மக்காவின் எதிர்கள் எங்களை இடை மறித்து தடுத்து முஹம்மதுடன் சேர்ந்து கொள்ளத்தானே செல்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்காக அல்ல வேறு ஒரு வேளையாக நாங்கள் மதீனாவுக்கு செல்கிறோம் என்று சொன்னோம். அப்படியானால் முஹம்மதுவுடன் சேர்ந்து யுத்ததில் ஈடுபடமாட்டோம் என்று வாக்குறுதி தருமாறு கேட்டார்கள். வேறு வழியின்றி வாக்குறுதி கொடுத்து விட்டு புறப்பட்டோம். நபிகள் நாயகம் அவர்களை சந்தித்து நடந்த வற்றைச் சொன்னோம் . பெருமானார் (ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னார்கள்: (இன்சரிஃபா! நபீ லஹும் பி அஹ்திஹிம் வ நஸ்தஈனுல்லாஹ அலைஹிம்) “நீங்கள் இருவரும் திரும்பிச் செல்லுங்கள். எதிரிகளுக்கு கொடுத்த வாக்கை நாம் நிறைவேற்றுவோம். யுத்தத்தில் வெற்றி பெற அல்லாஹ்விடம் உதவி கேட்போம். என்றார்கள் (ஸஹீஹ் முஸ்லிம் 3342)

பத்ரின் அரசியல் என்பது முதலில் அதன் நேர்மையான அனுகுமுறைகளாலேயே அதிக பொலிவு பெற்றுத் திகழ்கிறது. புற வெளியில் வெற்றி வாய்ப்பு சாத்தியமற்றயதாக தோன்றிய அந்த சூழலில் நபிகள் நாயகத்தின் அந்த அகஎழில் அவரை மட்டுமல்ல அவரது நண்பர்களையும் காப்பாற்றியது. மாத்திரமல்ல; அவர்களது இருப்பை உறுதியாக நிலைப்படுத்தியது.

அரசியலில் இத்தகைய நேர்மை எல்லோருக்கும் சாத்தியமா? எனக் கேட்கத் தோன்றலாம். வரலாற்றில் வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு அது சாத்தியமே!

இற்கு நேர்மாறான ஆர்ப்பாட்ட அரசியல் வாதியான அபூஜஹ்ல் தானும் அழிந்து தனது சமூகத்தையும் அநாதையாக்கியதையும் பத்ரு சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.

அபூஜஹ்லுக்கு நபிகள் நாயகம் உன்மையானவர் என்பது தெரிந்தே இருந்தது. அவனே ஒப்புதல் வாக்கு மூலமும் வழங்கி இருக்கிறான் ( இன்னா லா நுகத்தீபூக வலாகின் நுகத்திபு பிமா ஜிஃத பிஹி ) முஹம்மதே ! உம்மை பொய்ய்ரென்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் உனது கொள்கையை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று சொன்ன அவன் அதற்கான காரணத்தையும் கூறினான் குறைஷிகளின் உட் பிரிவான உங்களது ஹாசிம் குடும்பத்திற்கும் எங்களது அப்து ஷம்சு குடும்பத்திற்கு தலைமை யாருக்கு உரியது என்பதில் கடும் போட்டி இருக்கிறது. இந்தச் சூழலில் உம்மை இறைத் தூதர் என்று ஒப்புக் கொண்டால் எங்களால் அது விசயத்தில் போட்டி போட இயலாதல்லவா ? எனவே உம்மை நான் ஒத்துக் கொள்ள முடியாது என்று அவன் கூறினான்.
முஹம்மது (ஸல்) அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சியிம் அவனுக்குள் பழைய போட்டி பொறாமை உணர்வையே கிளறிவிட்டுக் கொண்டிருந்தது. அதனாலேயே மக்காவிலிருந்து வெளியேறிய முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தலைமக்கான தளம் அமைந்ததை ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அவரை அழித்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருதவனுக்கு அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்திற்கு ஆபத்து என்ற செய்தி பெரும் வாய்ப்பாக அமைந்தது. இதை வைத்து மக்காவின் மக்களுக்கு ஆக்ரோஷத்தை உண்டு பன்னி அவர்களை திரட்டிக் கொண்டு வந்திருந்தான். அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை பாதுகாப்பதை விட தனது போட்டியாளரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சுய வஞ்சமே மேலோங்கியிருந்த்து.

இத்தகைய தலைவர்கள் அமைவதை விட ஒரு சமூகத்திற்கு பெரிய துரதிஷ்டம் வேறு இருக்க முடியாது.

பத்ரு யுத்தம் தொடங்கு வதற்கு முதல் நாள் ஒரு பெரும் அழிவிலிருந்து குறைந்த பட்சம் ஒரு யுத்தத்திலிர்ந்து தன் சமூக மக்களை காப்பாற்றூவதற்கு அபூஜஹ்லுக்கு ஒரு வாய்ப்பு வந்தது.

வியாபாரிகளின் தலைவர் அபூசுப்யானின் கடிதம் அன்று அவனுக்கு வந்து சேர்ந்தது. தனது வியாபாரக் கூட்டம் செங்கடலின் கரையோர மார்க்கமாக பத்திரமாக திரும்பி விட்டது. என்வே மக்காவுக்கு திரும்பி வருமாறு அவர் அதில் கேட்டுக் கொண்டிருந்தார்.

எவரையும் அழித்தொழிப்பதற்கு முன்னாள் இறைவன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கத் தவறுவதில்லை. அபூஜஹ்ல் அந்த வாய்ப்பை வீணடித்தான்.

கடித்தத்தின் செய்தியை அறிந்து கொண்ட மக்காவிம் இன்னொரு தலைவரான் அஹ்னஸ் பின் ஷுரைக் அபூஜஹ்லிடம் எவ்வள்வோ எடுத்துச் சொல்லிப் பார்த்தார்!

அபுல் ஹிகம்! உங்களது சகோதரரின் மகன் உண்மையானவர் என்று உங்களுக்கு தெரியும் என்று நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். நாம் வியாபார்ககூட்டத்தை பாதுகாக்கத்தானே வந்தோம் அது பத்திரமாக வ்ந்து சேர்ந்து விட்டது வாருங்கள் திரும்பி விடுவோம் என்று அவனிடம் சொல்லிப் பார்த்தார். அவன் மசியவில்லை. தனது கருத்தை மறுப்பவர்கள் அத்தனை பேர்ரையும் கோழைகள் என்று ஏசினான். அவனது இந்தப் போக்கை ஏற்ற்குக் கொள்ளாத அஹ்னஸ் தனது ப்னூ சுஹ்ரா குடும்பத்தை சார்தோரை சுமார் 100 நப்ர்களை பத்ருக் களத்திலிருந்து திரும்ப அழைத்துச் சென்று விட்டார். அதனால் பனூ சுஹ்ரா குடும்பத்தினர் எவரும் பத்ரில் பலியாகாமல் தப்பினர்.

அபூஜஹ்லின் சுய வஞ்சம் அவனையும் அவனோடிருந்த பலரையும் மோசமாக பலி கொண்டது. அவனது சமூகத்தின் முதுகெலும்பை முறித்து போட்டது.

சாதாரணாமாக அரபு தீபகற்பத்தில் மக்காவின் குறைஷியருக்கு எதிர்ப்பே கிடயாது. மத ரீதியாக மிக பாதுகாப்பான பகுதியில் அவர்கள் வசித்தார்கள். அவர்கள் இருக்கிற இடம் தேடி யானைகளோடு வந்த படைகளே கூட சின்னபின்னமாகி சிதறிப்போனது என்பது தான் அதுவரைக்குமுண்டான வரலாறு.

அப்துல் முத்தலிபின் பண்பினால் பாதுகாக்கப் பட்ட மக்காவின் மக்கள் அபூஜஹ்ல் என்ற மோச்மான அரசியல் தலைமையினால் வரலாறு காணாத சோகத்தை முதல் முறையாக அனுபவித்தார்கள். மக்காவில் ஒரு மாத காலம் ஓலம் ஓயவில்லை

தன் சொந்த வெறுப்பை பிரதானப்படுத்திய ஒரு தவறான அரசியல் தலைமையின் அழிவும், அவனது சமூகத்திற்கேற்பட்ட கோரமான முடிவும் பத்ரின் அரசிய்ல பாடங்களில் மறந்துவிடக் கூடாது ஒரு பாடமாகும்.

யுத்தம் தொடங்குவதற்கு முன்னதாக நபிகள் நாயகம் (ஸல்)அவர்க்ள் தன் தோழர்களோடு ஆலோசனை கலந்தார்கள். ஒரு இறைத்தூதராக அவர் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டிய தேவை இல்லைதான் என்றாலும் ஒரு சிற்ந்த அரசியல் தலைவருக்கு முன்னுதாரமான தனது நடைமுறையை நபிகள் நாயகம் அமைத்துக் கொண்டார்கள். தனது கருத்தை தொண்டர்கள் மீது வலிந்து திணிக்கும் மலிவான ஆதிக்க மனப்பான்ம்மை அவரிடம் இருக்கவில்லை. ஒரு களத்தில் எதிரிகளை சந்திக்க நேர்ந்த பிறகு அவர்களை எதிர்கொள்ளாமல் புறமுதுகிட்டுச் செல்வது சரியல்ல என்ற நபிகள் நாயகத்தின் கருத்துக்கு தொண்டர்கள் அமோகமாக இசைவு தெரிவித்தார்கள்.
தன்னுடைய யோசனைக்கு மற்றவர்கள் இணங்கியது போலவே மற்றவர்களது யோசனைக்கு பெருமானாரும் இணங்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்ருப் பிரதேசத்திற்குள் நுழைந்த போது அதன் ஓரு ஒரத்தில் உள்ள நீர்நிலைக்கு அருகில் தங்குவதற்கு முடிவு செய்தார்கள். அப்போது குறிக்கிட்ட ஹப்பாப் பின் முன்திர் (ரலி) என்ற தோழர் “இல்லை. இன்னும் உள்ளே சென்று எதிர்களுக்கு நெருக்கமான இடத்திலிருக்கிற நீர் நிலைக்கு அருகே சென்று தங்குவோம் அப்போது நம்மிடம் தண்ணீர் இருக்கும் எதிரிகளிடம் தண்ணீர் இருக்காது என்று ஆலோசனை சொன்ன போது அந்த யோசனையை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதோடு நல்ல யோசனை என்று பாராட்டவும் செய்தார்கள்

இத்தகைய நடவடிக்கைகளால் தொண்டர்களின் முழு ஈடுபாடும் பெருமானாருக்கு கிடைத்தது.

யுத்தம் தொடங்கிய போது போர் முனையின் வாசலில் நின்று கொண்டு குறைஷியரான உதபா ஷைபா, வலீத் பிப் உத்பா ஆகியோர் தங்களோடு சண்டையிட வருமாறு கொக்கரித்தனர். அப்போது மதீனாவைச் சார்ந்த அன்சாரித் தோழர்களான அவ்பு முஆத் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோர் அவர்களை எதிர்கொள்ளச் சென்றார்கள்.

யுத்தத்தை முஸ்லிம்கள் எப்படி எடுத்துக் கொண்டார்கள் என்பதை அது காட்டியது. இஸ்லாத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் இது என்ற உணர்வு பிரதானப்பட்டு விட்டதை அது வெளிப்படுத்தியது.

ஆனால் மதீனாவீன் வீரர்களை கண்ட எதிரிகள் தம்முடம் மோதுவதற்கு தமது சொந்தக் குலத்தவர்களை அனுப்புமாறு கோரினர். அவர்கள் குலப் பெருமையின் அடிப்பாடையில் யுத்தத்தை எதிர்கொண்டார்கள் என்பதை அது காட்டியது.

பத்ரி யுத்ததில் முஸ்லிம்கள் வெற்றி பெற்றத்ற்கு அதுவே பிரதான காரணம். கொள்கை வழியில் போராடியவர்கள் ஜாதிய உணர்வில் போராடியவர்களை வென்றார்கள் என்பது பத்ரின் அரசியல் தரும் பிரதானச் செய்தியாகும்.

குறுகிய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு அரசியல் நடத்துவது இன்றைய அரசியலின் சூத்திரமாக உருவெடுத்திருக்கிறது. ஆனால் உன்னதமான பண்புகள் தருகிற வெற்றியே அதன் களப்பகுதிகளை கடந்து வரலாற்றில் வாழும் என்பதே பத்ரின் அரசியலாகும்.
பத்ரின் வரலாறு
கி.பி. 571 ம் ஆண்டு மக்கா நகரில் பிறந்த முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது நாற்பது வயதில் இறைச் செய்திகளை பெறத் தொடங்கிய பிறகு உருவமற்ற ஒரு இறைவனையே வணங்கவேண்டும் பிரச்சாரம் செய்தார்கள். ஆண்டாண்டு காலமாய் சிலை வணக்கத்தில் முழ்கிப் போய் பூம்யில் கட்டப்பட்ட முதல் இறையில்லமான கஃபாவிலேயே சிலைகளை வைத்து வழிப் பட்டுக் கொண்டு அதன் மூலம் தங்களை உயர்ந்த இனமாக அடையாளப் படுத்திக் கொண்டிருந்த குறைஷிக் குடும்பத்தினர் முஹம்மது (ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.


மக்காவில் அவரும் அவரது தோழர்களும் நியாயமற்ற சொல்லனா துயரங்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் ஆளானானார்கள். கடுமையான சமூக ஒதுக்குதலுக்கு உட்படுத்தப் பட்டார்கள். அதன் காரணமாக அவர்களது துணைவியார் அன்னை கதீஜாவின் திரளான சொத்துக்கள் காலியாயின. பல தோழர்கள் கடும் சித்தர்வதைக்கு ஆளானார்கள். சிலர் அந்தச் சித்திரவதைகளில் தம் இன்னுயிரை இழந்தார்கள். பக்கத்திலிருந்த வேறு ஏதாவது ஊரில் அடைக்கலாம கோரலாம் என்றால் மக்காவி குறைஷியர் அதற்கும் இடையூறு செய்தார்கள் விதித்தார்கள். எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் இஸ்லாமை தழுவிய ஒரு காரணத்திற்காக இந்தக் கொடுகைக்கு அவர்கள் ஆளாக்கப் பட்டார்கள். எந்த வகையிலிம் பதிலடி தருவதற்கு முஹம்மது (ஸல்) முஸ்லிம்களுக்கு அனுமதி அளிக்கவுமில்லை. பொறுமை பொறுமை என்பதே அவரது தாரக மந்திரமாக இருந்தது, எதுவரை பொறுமையாக காப்பது? என்று உணர்ச்சிவசப்பட்ட தோழர்களைப் பார்த்து முஹம்மது (ஸல்); “ நீங்கள் அவசர ப் படுகிறீர்கள். உங்களது தலை இருபுச் சீப்பால் வாரப்படலாம். அப்போதும் பொறுமையாக இருங்கள். ஒரு நல்ல காலம் பிறக்கும் அப்போது அரபு தீபகற்பம் முழுதும் அக்கிரமம் ஒழிந்து அமைதி தவழும் அது வரை பொறுமையாக இருங்கள் என்றார்கள். தோழர்கள் அடக்கு முறைகளை சகித்துக் கொண்டார்கள். எல்லவகையான இழப்புகளுக்கும் சம்மதித்தார்கள். மக்காவிலுர்ந்து வெளியேறுவதற்காக பல தோழர்களும் தங்களது வீடு, வாசல், தொழில் நிறுவனங்கள், சேர்த்து வைத்த சொத்துக்கள் அத்தனையையும் மக்கா குறைஷிகளிடம் கொடுத்து பிறகே வெளியேற முடிந்தது.


முஸ்லிம்களுக்கு மதீனாவில் ஒரு வசதியான தளம் அமைந்தது. மதீனா இஸ்லாமிய நகராக உருவாகியிருந்தது.மக்காவின் குறைஷிகள் முஹம்மது ஸல்) அவர்களை நிராகரித்த போது மதீனா நகரத்து பிரபலங்கள் பலர் மக்காவிற்கே வந்து அவரை ஏற்றனர். தங்களது ஊரில் அவரை வரவேற்கத் தயாராயினர்.
தலைவர்கள் முதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது இன்றைய அரசியலின் இயல்பு. ஆனால் மதீனாவில் தனக்கு ஒரு வசதியன தளம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட பிறகும் கூட முஹம்மது (ஸல்) அவர்கள் உடனடியாக மக்காவை விட்டு வெளியேறி விடவில்லை, தோழர்களை முதலில் அனுப்பி வைத்தார். இறுதியில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது மக்கா நகரிலிருந்து வெளியேறி மதீனாவில் குடியேறினார்.


அங்கு வசதியான இடம் கிடைத்தது என்ற போதும் ஒரு கொள்கையை ஏறுக்கொண்டதற்காக மக்காவின் மக்கள் மதீனாவில் அகதிகளாக வசதி வாய்ப்புக்களை இழந்து குடும்பத்தினரைப் பிரிந்து வாழ்வது நபிகள் நாயகத்திற்கு கவலையளிப்பதாகவே இருந்தது. அல்லாஹ் அந்தக் கவலைக்கு ஒரு தீர்வு சொன்னான.
அதுவரை திருப்பித்தாக்குவதற்கு தடை செய்யப் பட்டிருந்த முஸ்லிம்கள் இனி தங்களது தாக்குதலை தொடங்கலாம் என்று அனுமதி யளித்தான், திருக்குரானின் அந்த உத்திரவு இப்படி அமைந்தது. அதி அற்புதமாக சொல்லப் பட்ட உத்திரவு அது


யுத்தம் செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளானோருக்கு எதிர்த்து போராட அனுமதிக்கப் படுகிறது. அவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டிருக்கிறது. தங்களது வீடுகளை விட்டு அவர்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய ஆற்றலுடையவன்
இந்த வசனத்திற்குப் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவரளின் அரசியல் நடவ்டிக்கைகள் தீவிரம்டைந்தன. நமது பொருட்களை அபகரித்தவர்களுக்கு நாம் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என பெருமானார் நினைத்தார்கள்.
அப்போதுதான் தான் பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. மக்காவிலிருந்து 43 வியாபாரிகளைக் கொண்ட பெரும் வியாபாரக் கூட்டமொன்றூ அபூசுப்யானுடைய தலைமையில் சிர்யாவுக்கு புறப்படுகிறது என்ற செய்தி கிடைத்தது.அந்த வியாபாரத்தில் மக்காவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கிருந்தது.


மக்காவிலிருந்து சிரியாவுக்கு செல்வதானால் மதீனாவை கடந்து தான் செல்ல வேண்டும். செங்கடலை ஒட்டு ஒரு பாதை இருந்தது அது தொலைவு அதிகம், எனவே மதீனா வழியாக கடந்து செல்லும் மக்காவின் வியாபரக் கூட்டத்தை கைப்பற்றி அவர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்க முஹ்மமது (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள்.


சில குழுக்களை அனுப்பி வியாபாரம் கூட்டம் குறித்து விசாரிக்க அனுப்பினார்கள். நபித்தோழர் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஸ் தலைமயில் சென்ற ஒரு குழு மக்காவின் வெறு ஒரு சிறு வியாபாரக் கூட்டத்தை சந்தித்தது. அவர்களிடையே நடைபெற்ற மோதலில் அம்ரு பின் ஹழ்ரமீ என்ற மக்கா காரர் கொல்லப் பட்டார். ஆனால் அபூசுபயானுடைய வியாபாரக் கூட்டம் குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை.


பெருமானார் (ஸல்) அவர்கள் தானே தேடிச் செல்வது என்று முடிவு செய்தார்கள். தோழர்களை திரட்டினார்கள். அது ஒரு திட்டமிட்ட திரட்டுதலும் இல்லை. வருவோர் வரலாம் என்று அழைத்தார்கள். புறப்படுகிற போது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது கூட கணக்கிடப் படவில்லை. இடைவழியில் ஆட்களை எண்ணும்படி பெருமானார் உத்தரவிட்டார்கள். ஒருவர் எண்ணிப் பார்த்து விட்டு 313 பேர் இருக்கிறார்கள் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அந்த எண்ணிக்கையை கேட்டு மகிழ்ச்சிய்டைந்தார்கள். முற்காலத்தில் ஒரு முறை தங்களது தலைவருக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடந்து கொண்ட யூதர்க்குழுவினர் 313 பேர் இருந்ததனர் என்பதால் அந்த எண்ணிக்கை பெருமானாருக்கு மகிழ்சியளித்தது.


இதற்குள் சிரியா சென்று சேர்ந்து விட்ட அபூசுப்யானுக்கு நபிகள் நாயகத்தின் திட்டம் தெரிய வந்தது, அவர் ழம்ழம் என்ற ஒரு நபரை கூலிக்கு அமர்த்தி மக்கா குறைஷியரின் வியாபாரக் கூட்டத்திற்கு முஹம்மதால் ஆபத்து என்ற செய்தியை சொல்லுமாறு அனுப்பி வைத்தார்.
ஏற்கென்வே ஒரு கொலையால் கோபம் கொண்டிருந்த மக்காவிற்குள் இந்தச் செய்தி பெரும் புயலை உண்டு பண்ணியது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொட்டிருத பிரதான எதிரி அபூஜஹ்ல் வெறித்தனமாக மக்காவின் ஆட்களை திரட்டினான். 100 குதிரைகள் ஆயிரம் காலாட்ப்டையினரோடு அவன் படை எடுத்து புறப்பட்டன். ஆட்டம் பாட்டத்தோடு அவனது படை மதீனாவை நோக்கி நகர்ந்தது.


அபூசுப்யானின் வியாபாரக் கூட்டத்தை எதிர்பார்த்து மக்காவின் பாதையில் பயணம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுமார் 80 மைல்கள் பயணம் செய்து பத்ரு கிணறு இருக்கிற பகுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அபூஜஹ்லின் படை அதன் இன்னொரு முனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.


ஒரு இடையன் கொடுத்த தகவலால் மக்காவின் குறைஷிகள் படை எடுத்து வந்திருபதை அறிந்து கொண்ட பெருமானார் தோழர்களோடு ஆலோசனை செய்தார்கள். வியாபாரக் கூட்டத்தை சாதாரணமாக பிடித்து விடலாம் என்ற மனக் கோட்டையில் இருந்த தோழர்களுக்கு இந்தச் செய்தி அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆயினும் தான் புறப்பட்ட போது அல்லாஹ் ஒன்றூ வியாபாரக் கூட்டம் அல்லது வெற்றியை தருவதாக அல்லாஹ் வாக்களித்த திருக்குரானிய வசனத்தை எடுத்துக் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு களத்தில் எதிரிகளை நேருக்கு நேர் சந்தித்த பிறகு அவர்களை எதிர் கொள்வதையே தான் விரும்புவதாக குறிப்பிட்டார்கள். எந்த வகையான முன்னேற்பாட்டுக்கும் தயாராக இல்லாத நிலையிலும் கூட நபிகள் நாயகத்தின் தோழர்கள் அந்த முடிவுக்கு தங்களது பரிபூரண சம்மதத்தை வெளிப்படுத்தினார்கள்.


அதன் பிறகு யுத்ததிற்கான ஆயத்ததில் இறங்கிய தோழர்களை வரிசைப் படுத்தினார்கள். அது ஒரு வியாழக் கிழமையின் மாலை நேரம். இரு தரப்பாரும் ஒருவர் மற்றவர் வருகைப் பற்றி அறிந்து சண்டைக்கு தயாராக இருந்த சூழலில் வெள்ளிக்கிழமை பொழுது புலர்ந்தது.
மக்காவில் சந்தித்த இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு முஹம்மது (ஸல்) அவரகள் தன்னுடன் மக்காவிலிருந்து வந்த சுமார் நூறு பேருடனும் மதீனாவின் தோழர்கள் சுமார் இருநூறு பேர்களுடனும் அபூஜஹ்லின் தலைமையிலான எதிரணியினரைச் நேருக்கு நேர் சந்தித்தார்கள், முஸ்லிம்களின் அணியில் ஒரு ஒருங்கிணைப்பு ஒழுங்கும் இருந்தது, எதிரணியில் அது இல்லை,


யுத்தம் தொடங்கியது.முதலில் தனி நபர்கள் மோதினாரர்கள்.அது கொடுத்த ஆக்ரோஷத்தில் பிறகு அணியாக மோதினார்கள். காலையில் தொடங்கிய யுத்தம் லுஹர் நேரத்திற்குள்ளாக முடிந்து போனது.


முஸ்லிம்கள் வெற்றிய்டைந்தனர். எதிரிகள் தோற்றனர். முஸ்லிம்களது தரப்பில் 14 பேரும் எதிரிகளின் தரப்பில் எழுபது பேரும் கொல்லப்பட்டிருந்தனர். எதிரிகளில் 74 பேர் சிறை பிடிக்கப்பட்டவரகள் போக மற்றவர்கள் யுத்த களத்திலிருந்து விரண்டோடினர். எதிரிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் கொல்ல்பபட்டிருதனர்.


313 நபர்களை மட்டுமே கொண்ட அனுபவமும் ஆயுதங்களும் அற்ற சிறு படையினர் இறை விசுவசம் தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற ஒரு அம்சத்தை ,மட்டுமே கொண்டு அவர்களை விட வலிமையான போர்த்திறன் அதிக எண்ணிக்கையினரை வெற்றி கொண்டது ஒரு வரலாற்று அதிசயம்.

1 comment:

  1. .والله يجزاك جزاءً وافيًا

    ReplyDelete